பதவியேற்பு விழாவில் செல்போனை பறிகொடுத்த ஆம் ஆத்மி அமைச்சர்
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு கடந்த சனியன்று ஆட்சி அமைத்தது. ராம்லீலா மைதானத்தில் வைத்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மேலும் சில அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் மகாத்மா காந்தி சமாதிக்கு சென்ற கெஜ்ரிவால், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைமைச் செயலகம் வந்த அவர் அமைச்சர்களின் இலாகாக்களை அறிவித்தார்.
அதன்படி கிரிஷ் சோனிக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், சோம்நாத் பாரதிக்கு சட்டம் மற்றும் சுற்றுலா துறையும், ராக்கி பிர்லாவிற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையும், மணிஷ் சிசோடியாவுக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறையும், சத்யேந்திர ஜெயினுக்கு சுகாதார துறையும், சவுரவ் பரத்வாஜுக்கு போக்குவரத்து துறையும் ஒதுக்கி அவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்ற சவுரவ் பரத்வாஜ் கூட்ட நெரிசலில் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டார். அதனால், தற்போது டெல்லியின் போக்குவரத்துத் துறை அமைச்சர் செல்போன் இல்லாமல் யாரையும் தொடர்பு கொள்ள இயலாமல் தவித்து வருகிறாராம்.