கல்யாணத்துக்கு மறுத்த பெண்.. மாடியிலிலிருந்து தூக்கி வீசிய இளைஞர்... இதுவும் டெல்லியில்தான்!
டெல்லி: டெல்லியில் நேற்று இளம் ஆசிரியையை ஒரு இளைஞர் 30க்கும் மேற்பட்ட முறை கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொன்ற பயங்கரமே இன்னும் மக்கள் மனதை விட்டு அகலாத நிலையில் 21 வயது இளம் பெண்ணை மாடியிலிருந்து தூக்கி வீசி படுகாயப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இந்த கொடூரச் செயலில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளார். தற்போது அப்பெண் படுகாயத்துடன், கை, கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லியின் மங்கள்பூரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை அப்பெண் வசிக்கும் அவந்திகா என்கிளேவ் குடியிருப்புக்கு இளைஞர் அமித் வந்துள்ளார். 28 வயதான இவர், அப்பெண்ண ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்பெண்ணின் வீட்டுக்கு வந்த அமித், கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே போனார்.
அவரைப் பார்த்ததும் அப்பெண்ணின் தாயார், சகோதரி ஆகியோர் சத்தம் போட்டு வெளியே போகுமாறு கூறினர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தான் ஒரு தலையாக காதலித்து வந்த பெண்ணைப் பார்த்து என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அமித், அப்பெண்ணை வீட்டின் பால்கனியிலிருந்து தூக்கி கீழே போட்டு விட்டார்.
உடனடியாக அப்பெண்ணை பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கை, கால், இடுப்பு ஆகியவை முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. அமித்தை அப்பகுதியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து அமித் போலீஸாரிடம் கூறுகையில் அப்பெண் என்னிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். திருப்பித் தரவில்லை. அதனால்தான் கோபத்தில் இப்படிச் செய்து விட்டேன் என்று கூறினாராம். பேஸ்புக் மூலமாக இப்பெண்ணுடன் 2 வருடங்களுக்கு முன்பு நட்பாகியுள்ளார் அமித். இருவருக்கும் இடையே காதல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மகளின் காதல் தாயாருக்குத் தெரிய வந்தது. அவர் விசாரித்துப் பார்த்ததில் அமித் வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது தாயாரை மீறி எதுவும் செய்ய விரும்பவில்லை என்று அமித்திடம் அப்பெண்ணும் கூறி விட்டார். இதனால்தான் கோபத்தில் அமித் இப்படி நடந்து கொண்டதாகவும் கூற்படுகிறது.
ஆனால் இந்தக் காதல் விவகாரத்தை மறைத்து பண விவகாரம் என்று அமித் பொய் சொல்வதாகவும் போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.