மோடி அவைக்கு வராததால் ராஜ்ய சபா 8ம் நாளாக இன்றும் முடக்கம்.. பூதாகாரமாகும் ரூபாய் நோட்டு விவகாரம்
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி அவைக்கு வராததால் ராஜ்ய சபா 8ம் நாளாக இன்றும் முடங்கியது.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி அவைக்கு வர வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்தும் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராஜ்ய சபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு கடந்த 7 நாட்களாக முடக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நேற்று 2 மணி நேரம் மட்டுமே பிரதமர் ராஜ்ய சபாவிற்கு வந்தார். அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக கடுமையான விமர்சனத்தை விவாதத்தின் போது முன் வைத்தார். அதனையடுத்து மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் பக்கமே காணோம்.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி அவை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வரை அமளியில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா தொடங்கியது. அப்போது ராஜ்ய சபா காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் எழுந்து ரூபாய் நோட்டு செல்லாதது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி வர வேண்டும் என்று கோரினார். இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இருக்கையில் இருந்து எழுந்து மோடி அவைக்கு வர வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள்தான் ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று மோடி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். மேலும், யார் யார் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பது என்று தகவலை வெளியிட வேண்டும் என்றும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஏன் நாடாளுமன்றத்திற்கு மோடி வருவதில்லை என்றும் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் குரியனால் அமளியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் அதிகமானது. இதனையடுத்து, அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் மூன்றாவது முறையாக 2.30 மணிக்கு ராஜ்ய சபா கூடிய போது, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவை திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.