ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் வேளாண், சிறுதொழில்கள் கடும் பாதிப்பு: மன்மோகன் வார்னிங்
ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் வேளாண்மை மற்றும் சிறுதொழில்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்று மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வேளாண்மை மற்றும் சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்ய சபாவில் இன்று எச்சரித்துள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுடைய பணத்தை வங்கியில் மாற்ற நீண்ட வரிசையில் நின்ற போது இந்தியா முழுவதும் 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இப்படியான இக்கட்டான சூழலில் நாடாளுமன்றம் 16ம் தேதி தொடங்கியது. ராஜ்ய சபாவில் முதல் நாள் அன்றே காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து கடுமையாக பேசினார். மேலும், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ரூபாய் நோட்டு தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும், இது குறித்து தொடர்ந்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி கடந்த 6 நாட்களாக ராஜ்ய சபா முடக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ராஜ்ய சபாவில் இன்று 12 மணிக்கு வந்தார். இதனையடுத்து ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரம் குறித்து விவாதம் தொடங்கியது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஏற்படப் போகும் இறுதி விளைவு என்னவென்று தெரியவில்லை . அரசின் இந்த நடவடிக்கையால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் குறையும்
50 நாட்கள் துன்பத்தை அனுபவித்தால் மக்களுக்கு பேரழிவு வந்து சேரும். மோடி சொன்னது போல் 50 நாட்கள் மக்கள் துன்பத்தை அனுபவிக்க முடியாது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வேளாண்மை சிறுதொழில்கள் பெருமளவு பாதிக்கப்படும். மேலும், அரசு சாரா தொழில்கள் முடங்கிவிடும். விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். விவசாய தொழிலாளர்கள், கூட்டுறவு வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த செயல்பாட்டால் வங்கிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.
பணத்தட்டுப்பட்டால் வங்கி, ஏடிஎம் வரிசையில் நின்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வங்கியில் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதே போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதியை சொல்லுவதும் சரியல்ல. எனவே நடைமுறைக்கு சாத்தியமான திட்டத்தை அறிவிக்குமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications