பழைய ரூபாய் நோட்டு விவகாரம்.. கூட்டுறவு வங்கிகளுக்கான தடை நீக்கம்
பழைய ரூபாய் நோட்டுகளான 500 1000 ஆகியவற்றை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அவற்றை கூட்டுறவு வங்கிகளில் டெப்பாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தடை நீக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக கூட்டுறவு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இத்தடை நீக்கப்பட்டது குறித்து 2 நாட்களில் சுற்றிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் இனி பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.