கொல்கத்தாவில் வேட்டி கட்டி வந்தவர்களுக்கு ஷாப்பிங் மாலுக்குள் அனுமதி மறுப்பு!!
கொல்கத்தா: கொல்கத்தாவில் வணிக வளாகத்திற்கு வேட்டி கட்டி வந்த இருவரை மால் நிர்வாகம் உள்ளே விட மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் மையப்பகுதியில் குவேஸ்ட் ஷாப்பிங் மால் என்ற பெயரில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வேட்டி மற்றும் குர்தா அணிந்து வந்த நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கொல்கத்தாவை சேர்ந்த நடிகர் டெப்லீனா தனது பேஸ்புக் விவரித்துள்ளார்.
குயிஸ்ட் மாலிற்கு இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்த இருவரை தடுத்து நிறுத்திய காவலர்கள், தங்களிடம் இருந்த வாக்கி டாக்கி மூலம் உள்ளே விடலாமா என்று அனுமதி கேட்டுள்ளனர். தடுத்து நிறுத்தப்பட்ட நபர் ஆங்கிலத்தில் பேசி கேள்வி எழுப்பியதை அடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்டார். அதன்பின் உள்ளே சென்று நிர்வாகத்திடம் கேட்ட போது வேட்டி, லுங்கி கட்டியவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று கூறியுள்ளனர்.
பாரம்பரிய உடை அணிந்து சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தை மொபைலில் வீடியோவாக பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டெப்லீனா. அதில் இந்த சம்பவம் முதல் நிகழ்வல்ல. பல நடசத்திர விடுதிகளுக்குள் வேட்டி கட்டி செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் ஒரு வணிக வளாகத்திற்குள் அனுமதி மறுப்பது இது தான் முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு வேட்டி கட்டி வந்த ஒரு காரணத்துக்காகவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் கிளப் அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.