டெல்லியில் கடும் பனிமூட்டம்.. டிரக் மீது பஸ் மோதல்.. விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் கடும் பனி ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப் பொழிவு காணப்படுவதால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளி நேரத்தில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்ததால் கடுமையான புகைப்பனி மூட்டம் ஏற்பட்டது. மாணவர்கள், வேலைக்கு செல்வோரும் கடும் பாதிப்பிற்கு ஆளானார்கள். '
இந்நிலையில், தற்போது குளிர்காலம் என்பதால் டெல்லியில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதேபோன்று அருகில் உள்ள மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி
டெல்லியில் இன்று அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் மனிதர்கள் ஒருவருக்கொருவரை பார்க்க முடியவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் யார் மீதாவது மோதி விடுவோமோ என்ற அச்சத்தோடு வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் ஏற்பட்டுள்ள அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லி மற்றும் லக்னோ விமான நிலையங்களில் விமானம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் தாமதமாக வந்து செல்கின்றன.

ரயில் சேவை பாதிப்பு
உத்திர பிரதேச மாநிலத்திலும் கடும்பனி மூட்டம் நிலவி வருவதால், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய செய்து எச்சரிக்கையாக பயணம் செய்கின்றனர்.

டிரக்-பஸ் மோதல்
உத்தரப் பிரதேசம் மாநிலம் மாவ் மாவட்டத்தில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் எதிர் வரும் வாகனங்கள் தெரியாமல் சாலை விபத்து நடைபெற்றது. இன்று காலையில் ஒரு டிரக் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications