ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் ரூ.64,250 கோடி டெபாசிட்!
நவம்பர் 8ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் நாடு முழுவதும் இதுவரை ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதற்கு பதிலாக புதியதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் சில்லரை தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதன் மூலம் நாள் தோறும் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது. அதுபோல பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், மொத்தம் 25.58 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆனால், 5.98 கோடி வங்கிக் கணக்குகள் எவ்வித சேமிப்புத் தொகையும் இன்றி, வெறுமனே பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போதைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைத்து ஜன் தன் வங்கிக் கணக்குகளிலும் பணம் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் ரூ.64,252 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ரூ.10,670 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் மாநிலத்தில்ரூ.7,826.44 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அங்கு ரூ 5,345.57 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஜன் தன் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி, கருப்புப் பணத்தை டெபாசிட் செய்பவர்களையும் கண்காணித்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.