சீரழிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்ய முன்வந்துள்ள தேரா சச்சா சவுதா அமைப்பினர்
சிர்சா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை தனது ஆதரவாளர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என தேரா சச்சா சவுதா என்ற சீக்கிய அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கிய அமைப்பு தேரா சச்சா சவுதா. அந்த அமைப்புக்கு ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தேரா சச்சா சவுதா அமைப்பு ஏற்கனவே 105 நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த எண்ணிக்கையை 106 ஆக ஆக்க எங்கள் குருஜி முடிவு செய்துள்ளார். அதாவது விருப்பம் உள்ள ஆதரவாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தான் அந்த புதிய திட்டம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி மற்றும் கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்து வரும் பெண்களை மணக்க 1,400 தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆதித்யா இன்சான் கூறுகையில்,
பலாத்காரம் செய்யப்பட்டு குடும்பத்தாரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்க தேரா சச்சா சவுதா முடிவு செய்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட சில பெண்கள் குருஜியை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்புகிறார்கள். அந்த பெண்களை திருமணம் செய்ய எங்கள் அமைப்பின் ஆதரவாளர்கள் சம்மதித்துள்ளனர்.
முன்னதாக எங்கள் அமைப்பின் ஆதரவாளர்கள் 20 பாலியல் தொழிலாளிகள், 50 விவாகரத்தான பெண்கள் மற்றும் விதவைகளை திருமணம் செய்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications