ம.பி. தேர்தல்..: சிவ்ராஜ்சிங் சவுகானின் 'மதச்சார்பின்மை' முகம் கைகொடுக்குமா?
போபால்: மதச்சார்பற்றவராக அடையாளப்படுத்திக் கொண்டது சட்டசபை தேர்தலுக்கு கைகொடுக்கும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார்.
மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு நவம்பர் 25-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இம்மாநிலத்தில் காங்கிரஸை விட சற்று செல்வாக்காக பாரதிய ஜனதா இருந்து வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கரைப் போல இங்கு இடதுசாரிகளுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட்டும் கிடைப்பதில்லை..

230 தொகுதிகள்..
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இதில் 148 பொது. தாழ்த்தப்பட்டோர்-35, பழங்குடியினருக்கானவை 47.

பாஜகவுக்கு 143
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 143 இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. வாக்கு சதவீதம் 38.09%.

காங்கிரசுக்கு 71
காங்கிரஸ் கட்சியால் 71 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 32.85%.

தேசியவாத காங்கிரஸுக்கு 16%
தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு 2-ல் டெபாசிட் இழந்தது. ஆனால் அக்கட்சி மொத்தம் 63,176 வாக்குகளைப் பெற்றிருக்கிறது (16.63%).

பகுஜன் சமாஜ்
ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் போல இங்கும் பகுஜன் சமாஜ் போட்டியிட்டு 7 இடங்களைக் கைப்பற்றியது. இதன் வாக்கு சதவீதம் 9.08%.

டெபாசிட் பறிகொடுத்த இடதுகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 21, மார்க்சிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலுமே டெபாசிட்டை இழந்தது. இதே கதைதான் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கும்.. 4 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தமே 2661 வாக்குகளைத் தான் பெற்றது.

மோடியைப் போல..
குஜராத் மாநில முதல்வர் மோடியைப் போலவே தமது செல்வாக்கை கட்சியில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிவ்ராஜ்சிங்கின் கனவு. இதனாலேயே அண்மைக்காலமாக இஸ்லாமியர்களுக்கு ஏராளமான சலுகைகள், இஸ்லாமியர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என மதச்சார்பற்றவராக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த முகம் தற்போதைய தேர்தலில் கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications