ஆம் ஆத்மி கட்சிக்குள் 'வெட்டு குத்து' அமோகம்!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களிடையே சில நாட்களாகவே மிகப் பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது வெளிப்படையாக வெடித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பல பிரபலங்கள் வெளியேறி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அஞ்சலி தமானியா மற்றும் மாநிலச் செயலர் பிரீத்தி மேனன் ஆகியோர் நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
ஆனால் அவர்கள் சில மணி நேரத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் கட்சியில் சேர்ந்தனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிசோடியா தவறாக வழி நடத்துவதாக மற்றொரு மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டினார்.
ஆனால் கேஜ்ரிவாலை குறி வைத்தே யோகேந்திர யாதவ் விமர்சிப்பதாகவும், கட்சியின் உள் விவகாரங்களை பகிரங்கப்படுத்துவதாகவும் சிசோடியாக பதிலடி கொடுத்தார்.
ஆம் ஆத்மி கட்சியில் தொடரும் உட்கட்சி மோதல் இப்போது பகிரங்கமாக வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.