ஏப்ரல் 14 முதல் "டிஜிட்டல் அக்ரி" விற்பனை திட்டம்... மோடி தகவல்
டெல்லி: நாட்டில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஆன்லைனில் விற்கும் வகையிலான "டிஜிட்டல் அக்ரி" திட்டம் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதியன்று தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பினை பயிர் காப்பீட்டு திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டம் ஷேர்பூர் கிராமத்தில் விவசாயிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அத்திட்டத்தின் செயலாக்க விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.

வாஜ்பாய் அரசு அறிமுகம்:
அதில் பேசிய அவர், "வாஜ்பாய் அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் பின்னர் வந்த அரசு அத்திட்டத்தில் திருத்தங்களை செய்ததால் விவசாயிகளின் மனதில் சந்தேகங்கள் எழுந்தன.

இயற்கை சீற்றங்கள்:
விவசாயிகள் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தாலும் பயிர் காப்பீடு செய்வதில்லை. காப்பீடு செய்தாலும் இழப்பீடு கிடைக்காது என்ற மாயையே அதற்கு காரணம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய சவால் நமக்கு உள்ளது.

குறைவான இழப்பீடு:
என்னை விவசாயிகளுக்கு எதிரானவன் என்று வர்ணித்தவர்களால் கூட இந்த திட்டத்தை எதிர்க்க முடியவில்லை. காரணம், இது விவசாயிகளின் மனதில் பதிந்து விட்டது. முன்பெல்லாம் காப்பீட்டு நிறுவனங்கள், விவசாயிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தன. அதிகமான பிரீமியத்தை பெற்றுக்கொண்டு குறைவான இழப்பீட்டை அளித்தன.

உச்சவரம்பு கிடையாது:
ஆனால் இந்த அரசு பிரீமியத்துக்கு உச்சவரம்பு நிர்ணயித்து இழப்பீட்டுக்கு உச்சவரம்பை நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி சம்பா பயிருக்கு 1.5 சதவீதமும், குறுவை பயிருக்கு 2 சதவீதமும் பிரீமியமாக செலுத்தினால் போதும். இழப்பீட்டுக்கு உச்சவரம்பே கிடையாது.

ஆன்லைன் விற்பனை:
இதனையடுத்து சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று விவசாயிகளுக்கான "டிஜிட்டல் வேளாண்மை சந்தை" என்ற புதிய திட்டத்தை தொடங்கப் போகிறோம். அதன்படி, விவசாயிகள் தங்கள் மொபைல் போன் மூலம் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் முறையில் விற்பனைக்கு கொண்டு வரலாம்.

விற்பனை எளிது இனி:
நாட்டின் எந்த மூலையில் நல்ல விலை கிடைக்கிறதோ, அங்கு விற்று விடலாம். 2020 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க நான் உறுதி பூண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications