கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகும்: திக்விஜய் கன்னட டிவி சேனல் எக்சிட் போல்
இன்றயை எக்சிட் போல் முடிவுப்படி பார்த்தால் 112 தொகுதிகளை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் திக்விஜய் கருத்து கணிப்புபடி 107 தொகுதிகளை அதிகபட்சமாக பாஜகவால் வெல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இன்று 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குப் பதிவுக்கு பிறகு பல்வேறு டிவி சேனல்கள் எக்சிட் போல் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
கர்நாடகாவில் வெளியாகும் முன்னணி தினப்பத்திரிகையான விஜயவாணி மற்றும் அதன் குழும டிவி சேனலான திக்விஜய் கன்னடா சேனல் ஆகியவை இணைந்து நடத்திய எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த எக்சிட் போல் முடிவுப்படி, பாஜகவுக்கு 103-107 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 76-80 தொகுதிகளில் வெல்லும் என்றும், தேவகவுடாவின் மஜத 31-35 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறர் 4-8 தொகுதிகளில் வெல்ல முடியுமாம். 222 தொகுதிகளுக்குத்தான் இன்று தேர்தல் நடந்தது. ஜெயநகர் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை.
எனவே இன்றயை எக்சிட் போல் முடிவுப்படி பார்த்தால் 112 தொகுதிகளை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் திக்விஜய் கருத்து கணிப்புபடி 107 தொகுதிகளை அதிகபட்சமாக பாஜகவால் வெல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. எனவே தனிப்பெரும் கட்சியாக பாஜக வர முடியுமே தவிர தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்கிறது.
மதசார்பற்ற ஜனதாதளம் கிங் மேக்கராக உருவாகுவது உறுதியாகியுள்ளது.