8ம் தேதியில் இருந்து எவ்வளவு நகை விற்றீர்கள்.. நகைக் கடைகளுக்கு சுங்கவரி புலனாய்வு நோட்டீஸ்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த பிறகு எவ்வளவு நகை விற்பனையாகியுள்ளது என்று நகைக்கடைகளுக்கு சுங்கவரி புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பின்னர் பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு நகைகளை விற்றதாக நகைக்கடைகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, நகை விற்பனை தொடர்பாக சுங்கவரி புலனாய்வு இயக்குநரகம் நகைக்கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதனையடுத்து, கையில் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து அதற்கு பதிலாக நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், நகைக் கடைகளில் 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் அவர்களிடம் இருந்து பான்கார்ட் எண்ணை பெற வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதிகள் எல்லாம் சரியாக பின்பற்றப்பட்டவா என்று தெரியவில்லை. பலரும் பழைய நோட்டுக்களுக்கு பதிலாக தங்க நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பல நகைக்கடைகளில் விடிய விடிய நகைகள் விற்கப்பட்டன.
இதனையடுத்து, நகைக்கடைகளில் விற்கப்பட்ட நகை விவரத்தை கேட்டு மத்திய சுங்கவரி புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், போபால், விஜயவாடா, நாசிக் மற்றும் லக்னோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள 600 நகைக்கடைகளுக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிற இடங்களில் உள்ள நகைக்கடைகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுங்கவரி புலனாய்வு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், கடந்த 7ம் தேதி விற்பனை செய்யப்பட்டது போக மீதி எவ்வளவு நகைகள் இருப்பு இருந்தன; பிரதமரின் அறிவிப்பு வெளியான பிறகு விற்கப்பட்ட நகையின் மதிப்பு எவ்வளவு; எவ்வளவு மதிப்பில் பில்கள் போடப்பட்டுள்ளன; பான் எண் பெறப்பட்டதா என்பன போன்ற விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications