பூங்காவில் ஆரம்பித்த நாய்ச்சண்டை வீடு வரை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது... டெல்லியில்!
டெல்லி: டெல்லியில் பூங்கா ஒன்றில் நாய்க்காக நடந்த சண்டையின் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஹுமான்யூர் காலனியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு நேற்று மாலை தனது நாயை வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார் மாண்டி என்பவர். அப்போது அங்கு வந்த ரோஹித் என்ற இளைஞர் பூங்காவிற்குள் நாய்கள் அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
பின்னர் அங்கிருந்து தனது நாயுடன் புறப்பட்டுச் சென்ற மாண்டி, இது தொடர்பாக தனது தாய் மற்றும் சகோதரரை பூங்காவிற்கு அனுப்பி, ரோஹித்துடன் சண்டை போட வைத்துள்ளார். இதனால், அந்த இடமே சிறிதுநேரம் பரபரப்பாக இருந்தது.
இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாண்டியின் அம்மாவையும், சகோதரரையும் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை புகாராக எழுதித் தரச் சொல்லியுள்ளனர்.
இதற்குள்ளாக ரோஹித் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மாண்டியின் வீட்டைக் கல்வீசித் தாக்கியுள்ளார். இதனால் மாண்டியும் அவரது சகோதரரும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ரோஹித் தரப்பு, மாண்டி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பெரும்பாலான துப்பாக்கிக் குண்டுகள் வீட்டுச் சுவரைத் தாக்கியபோதும், இந்த சம்பவத்தில் மாண்டியின் சகோதரர் சன்னிக்கும் காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள்ளாக தாக்குதல் நடத்திய கும்பல் தலைமறைவானது.
இந்த சம்பவம் மாண்டி வீட்டிற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதும் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ரவீந்தர் மற்றும் பிரசாந்த் என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான ரோஹித்தும், அவரது கூட்டாளிகளும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாய்க்காக நடந்த சண்டை துப்பாக்கிச் சூடு வரை போனதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.