முடிவு தெரிந்தாக வேண்டும்.. க்ளைமேக்ஸ் நோக்கி ஓபிஎஸ் தகுதி நீக்க வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா இல்லையா என்ற வழக்கில், கிட்டத்தட்ட கிளைமேக்ஸ் கட்டம் எட்டப்பட்டுள்ளது.
அதிமுக பிளவுபட்டிருந்தபோது 2017ல் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, அரசை எதிர்த்து வாக்களித்தார் ஓபிஎஸ். அவரோடு சேர்த்து அவர் அணியை சேர்ந்த 11 பேரும் இவ்வாறு வாக்களித்தனர்.

ஆனால் அதிமுக கொறடா உத்தரவை மீறி இவர்கள் வாக்களித்தும், சபாநாயகர் இதுவரை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திமுக சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இன்று அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, வழக்கு முதல் நாளே சூடுபிடித்தது. பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
- சபாநாயகருக்கு இந்த வழக்கில் உள்ள சிக்கல் என்ன? என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞா் விஜய் நாராயணன் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்
- சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார்? என்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
- தகுதி நீக்க கோரும் மனுவை பேரவைத் தலைவர் கிடப்பில் வைத்திருக்க முடியாது என தலைமை நீதிபதி கருத்து
- 3 வருடங்களாக இந்த விஷயத்தில் சபாநாயகர் எதுவும் செய்யாமல் இருந்தது அநாவசியம் என்றும் தலைமை நீதிபதி கருத்து
- பிப்ரவரி 14ம் தேதி வழக்கு விசாரணை மறுபடியும் நடக்கும்
இவ்வாறு முதல் நாளே அதிரடி காட்டியுள்ளது உச்சநீதிமன்றம். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்கிறாரோ இல்லையோ, அந்த புகாரின் மீது சபாநாயகர் என்னதான் முடிவு எடுத்துள்ளார் என்பதே நாங்கள் அறிய விரும்புவது என்று திமுக தரப்பு வாதம் முன் வைத்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றமும் அதை நோக்கியே விசாரணையை நகர்த்துகிறது.
எப்படியும் அடுத்த கட்ட விசாரணைக்குள், சபாநாயகர் ஏதாவது ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளார். ஒருவேளை ஏதாவது காரணம் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. எதுவாக இருந்தாலும், இந்த பிரச்சினையின் நிலை என்ன என்பது வெளியே வந்தேயாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications