ஜெ.க்கு பதவிப்பிரமாணம் செய்யக் கூடாது: ஆளுநருக்கு தே.மு.தி.க. வக்கீல் நோட்டீஸ்... பரபரப்பு!!
டெல்லி: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் முதல்வராக பதவியேற்பு செய்து வைக்கக் கூடாது என்று ஆளுநர் ரோசையாவுக்கு தே.மு.தி.க.வைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ். மணி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அம்மாநிலத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் ஆகியோரும் மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே மே 22-ந் தேதி சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது. இதில் ஜெயலலிதா, சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அன்றே மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து தே.மு.தி.க.வைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ். மணி என்பவர் ஆளுநர் ரோசையா, தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய 90 நாட்கள் அவகாசம் இருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அதன் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைப்பது சட்டவிரோதமாகும். ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications