பாஜகவோ காங்கிரஸோ என் தலைமையை ஏற்றால்தான் கூட்டணி: விஜயகாந்த் அறிவிப்பு

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசியதாவது:
தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அது பாஜகவோ அல்லது காங்கிரஸோ... அவர்கள் எனது தலைமையை ஏற்க வேண்டும்.
டெல்லியில் வாழும் தமிழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை உள்ளது. இவர்களை நாங்கள் சந்தித்த பிறகு மற்ற கட்சிகள் தமிழில் நோட்டீஸ் அடித்து பிரசாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியம் அல்ல. இங்குள்ள தமிழர்கள் படும் கஷ்டங்களை எங்கள் கட்சிக்காரர்கள் சொல்லக் கேட்டு, தேமுதிக போட்டியிடுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தர நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இங்கு போட்டியிடுகிறோம்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே தமிழர்களுக்காக எந்த நல்ல காரியத்தையும் செய்யவில்லை.
ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என அங்குள்ள மக்களுக்கு தெரியும். அதுபற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications