அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் பறிமுதல்- சி.பி.ஐ., விசாரணை கோரி மோடியிடம் தி.மு.க மனு
டெல்லி: தமிழக அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமான அன்புநாதனின் கரூர் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் திமுக நிர்வாகிகள் இன்று நேரில் மனு கொடுத்தனர்.
கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.அன்புநாதன். அதிமுகவைச் சேர்ந்த இவர், சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கோடிக்கணக்கான பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும்படைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இவரது வீட்டில் கடந்த மாதம் 22-ந் தேதி தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ரொக்கப்பணம், பணம் எண்ணும் இயந்திரம், கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த போலி ஆம்புலன்ஸ் வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

அன்புநாதன் மீது வழக்கு
இதையடுத்து பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அன்புநாதன் மீது வேலாயுதம்பாளையம் போலீஸார் தேர்தல் நடத்தை விதி மீறல், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அன்புநாதன் தலைமறைவானார். அவருக்கு நேற்று முன்ஜாமீன் கிடைத்தது.

திமுக வலியுறுத்தல்
இந்த அன்புநாதன் மீதான நடவடிக்கைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என மதுரையில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி இருந்தார். அன்புநாதன் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மோடியிடம் மனு
இந்நிலையில் திமுக எம்பி கே.பி.ராமலிங்கம் மற்றும் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், கரூரில் அன்புநாதனிடம் இருந்து தேர்தல் அதிகாரிகள் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். பல மாவட்டங்களில் அ.தி.மு.க.,வினர் பணம் பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்; இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மோடி உறுதி
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். நாங்களும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications