ஜெ. வழக்கு: அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் க. அன்பழகன் மனு!
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி 4 ஆண்டு சிறப்பு தண்டனை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
தனிநீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார். அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியது திமுகவின் அன்பழகன் தரப்பு.
மேலும், பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்பதும் அன்பழகன் தரப்பு வாதம். இதனால் பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.
இம்மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பவானிசிங்கை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் க. அன்பழகன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அன்பழகன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், பவானிசிங் ஆஜரானால் வழக்கின் போக்கு மாறக் கூடும். இதனால் வேறு ஒருவரை அரசு வழக்கறிஞராக கர்நாடகா அரசு நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.