திமுக- காங் பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்குகிறது... ராகுலை சந்திக்கிறார் ஸ்டாலின் மருமகன் சபரீசன்
டெல்லி: சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை திமுக பொருளாளர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்திக்க உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் தற்போதைய நிலையில் பல கட்சிகளைக் கொண்ட கூட்டணி உருவாகும் நிலை உள்ளது. தேமுதிக, பாஜகவை நோக்கி நகருவதாக கூறப்பட்டாலும் அது வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணிக்கு போவதற்கு சாத்தியங்கள் இருக்கிறது.
இதனால் எப்படியும் தங்கள் அணிக்கு தேமுதிக வராது என்பதை உறுதி செய்து கொண்டுள்ளது திமுக.
ராகுலை சந்திக்கும் சபரீசன்
இதனைத் தொடர்ந்து காங்கிரஸுடனான பேச்சுவார்த்தைகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரம் கேட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலிடத்தில் இருந்து பேச்சு
திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை கருணாநிதி, ஸ்டாலின் நடத்தி வந்த காலம் மலையேறிப் போய் ஹைடெக்கான அடுத்த தலைமுறை முதல் கட்ட பேச்சுக்களில் களமிறங்க ஆரம்பித்துவிட்டது. இம்முறை காங்கிரஸுடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக டெல்லி மேலிடத்தில் இருந்தே பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளதாம் திமுக.
குறுக்குசால் ஓட்டிவிட்டா...
வழக்கமாக தமிழகத் தலைவர்களுடன் முதலில் கூட்டணி குறித்து பேசப்படும். ஆனால் அப்படி பேசப்போய் ஆட்சியில் பங்கு என்றெல்லாம் குறுக்குசால் ஓட்டி கூட்டணி அமைவதில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் டெல்லிக்கு படையெடுப்பதைவிட அங்கிருந்தே பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டால் சிக்கல் இல்லை என்பது திமுகவின் கால்குலேஷன். இதற்காகத்தான் ராகுல் காந்தியிடம் நேரில் பேசிவிடுவது என திட்டமிட்டுள்ளதாம் திமுக.
இளங்கோவன் அதிருப்தி
தங்களுடன் நேரடியாக பேசாமல், டெல்லிக்குப் போய் திமுக பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது என்கிற தகவல் கிடைத்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்; ராகுல் காந்தியே முதல்வர் வேட்பாளர்; ராகுல் தமிழக முதல்வராக வேண்டும் என்று வெளுத்து வாங்கி வருகிறாராம் இளங்கோவன்...
ஆக விரைவில் க்ளைமாக்ஸ்?