கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு டோல் கட்டணம் கிடையாது.. குஷியான அறிவிப்பு வெளியிடும் ம.பி. அரசு?
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் இனி தனியார் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த வேண்டியதில்லை என்கிற உத்தரவை அரசு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அம்மாநில வாகன பயன்பாட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சுமார் 200 சாலைகள் மாநில போக்குவரத்து துறையின் கீழ் வருகிறது. இந்த சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த நெரிசலை தவிர்க்க சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த அம்மாநில அரசு முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய விதி
இதன் மூலம் தனியார் வாகன உரிமையாளர்கள் இனி டோல்கேட்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை. மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வரும் அனைத்து புதிய மற்றும் பழைய சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தும். இந்த புதிய விதிக்கான முன்மொழிவு இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து முதன்மைச் செயலாளர் நீரஜ் மாண்ட்லோய் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விதி அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின்னரே அமல்படுத்தப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஒப்புதல்
இந்த முடிவை எடுப்பதற்கு முன், பொதுப்பணித்துறை மாநிலத்தில் உள்ள சுமார் 200 சாலைகளை ஆய்வு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில், 80 சதவிகித வனிக வாகனங்களும் 20 சதவிகிதம் தனியார் வாகனங்களும் சுங்க வரியை செலுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த 20 சதவிகிதம் வரி செலுத்தும் வாகனங்கள் நெரிசலில் நீண்ட நேரம் சிக்கி தவிக்கின்றன. தனியார் வாகனங்களைவிடவும் வனிக பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனவே இந்த சிக்கலை போக்க தனியார் வாகனங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வசூலிப்பு உரிமை
முன்னதாக பொதுப்பணித் துறையின் ஆய்வின் கீழ் எடுக்கப்பட்ட 200 சாலைகளும் மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தால் பில்ட் ஆபரேட் மற்றும் டிரான்ஸ்ஃபர் (பிஓடி) முறையில் அமைக்கப்பட்ட சாலைகளாகும். பிஓடி முறை என்பது சாலை அமைக்கும் தனியார் நிறுவனத்திற்கு அரசு அதற்கான தொகை வசூலித்துக்கொள்ள கான்டிராக்ட் முறையில் வசூலிப்பு உரிமையை குறிப்பிட்ட காலத்திற்கு அந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கும். அல்லது சாலை பராமரிப்பை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு வசூலிப்பு உரிமை வழங்கப்படும்.

ஜிபிஎஸ் கட்டண வசூல்
சாலை விதிகளை பொறுத்த அளவில் நாடு முழுவதும் இனி வரும் காலங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி இனி டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்கு பதில் நெடுஞ்சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் எவ்வளவு தூரம் நெடுஞ்சாலையை பயன்படுத்துகிறாரோ அவ்வளவு தொகையை அவர் கொடுக்க வேண்டும். இந்த கட்டண வசூல் முறையானது பல ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தற்போது மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications