26 ஆண்டுகளாகியும் நண்பரை மறக்காமல் திருமண பத்திரிகை அனுப்பிய நபர்! ஆந்திராவில் கம்பி எண்ணும் சோகம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோசமான சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாக இருந்த நிலையில் திருமண பத்திரிகையை வைத்து அவர் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது 55 வயதாகிறது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குடிபண்டா மண்டலம் திண்ணஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் திப்பேசாமி. இவர் தனது மனைவிக்கு தவறான தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு 6 மாத குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கடந்த 1998ஆம் ஆண்டு மனைவி, தனது 6 மாத ஆண் குழந்தையுடன் தசரா விழாவில் பங்கேற்க ஒரு கோயிலுக்கு திப்பேசாமி சென்றிருந்தார்.
அப்போது மனைவி கோயிலை சுற்றிக் கொண்டிருந்த போது மனைவி மீது இருந்த சந்தேகத்தால் தனது 6 மாத மகனை தூக்கிச் சென்று ஒரு புதரில் கொலை செய்து அந்த சடலத்தை அங்கேயே குழித் தோண்டி புதைத்துவிட்டு திப்பேசாமி ஓடிவிட்டார்.
இதையடுத்து மகனையும் கணவரையும் காணவில்லை என மனைவி குடிபண்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது நடந்த விசாரணையில் திப்பேசாமி தனது மகனை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
அப்போது முதல் திப்பேசாமி தலைமறைவு குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் கர்நாடகாவுக்கு தப்பிச் சென்று தனது பெயரை கிருஷ்ணா கவுடா என மாற்றிக் கொண்டார்.
இதையடுத்து அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்ணஹட்டியில் இருக்கும் நெருங்கிய நண்பர் நாகராஜுக்கு பெண்ணின் திருமண பத்திரிகையை திப்பேசாமி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த தகவல் போலீஸாரின் கவனத்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து அனந்தபூர் போலீஸார் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்திற்கு சென்று அங்கிருந்த கொலை குற்றவாளி திப்பேசாமியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications