கோரக்பூரில் 72 குழந்தைகள் மரண விவகாரம்: டாக்டர் கபீல் கான் திடீர் கைது!
கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 72 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோரக்பூர்: கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 72 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த டாக்டர் கபீ கானை சிறப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளீல் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 72 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது என குற்றம்சாட்டினர்.
ஆனால் உத்திரபிரதேச அரசு, குழந்தைகள் மூளை அழற்சி நோயால் இறந்தன என கூறியது. இந்நிலையில், மூளை அழற்சி பிரிவின் பொறுப்பு மருத்துவராக செயல்பட்ட கபீல்கானை அரசு பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது.
அதனையடுத்து, அவர் தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று இரவு சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். கபீல் கான் தன் சொந்த செலவில் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக் குழு அமைத்திருந்தது. அக்குழு சமீபத்தில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
மேலும், டாக்டர் கபீல் கான் மீதும் அதே அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபீல் கான் உள்பட 7 பேருக்கு எதிராக கீழமை நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.