கொல்கத்தா டாக்டருக்கு நடந்தது தெரியும்.. ஒடிசா டாக்டர் பண்ண வேலை தெரியுமா?
கட்டாக்: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டருக்கு நடந்த பாலியல் கொலை மருத்துவத் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கு குறித்து தினசரி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களும், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், மேலும் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு நேர் எதிரான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் கட்டால் எஸ்.சி.பி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கார்டியாலஜி துறை டாக்டராக இருப்பவர் தாகூர் தில்பக் சிங். 35 வயதான இவர் போபால் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை இரண்டு பெண் நோயாளிகளின் உறவினர்கள் அந்த டாக்டருக்கு தர்மஅடி கொடுத்தனர். அடித்த அடியில் அவர் அதே மருத்துவமனையின் ஐசியூவில் அட்மிட்டாகிவிட்டார். அதன்பிறகுதான் உறவினர்கள் கோபத்துக்கான காரணம் வெளியில் தெரிந்தது.
இதுகுறித்து இரண்டு பெண்களின் உறவினர்கள் காவல்நிலையத்தில் டாக்டர் தாகூர் மீது புகாரளித்துள்ளனர். அதில் அந்த இரண்டு பெண்களுக்கும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னை இருந்துள்ளது. இதற்காக தாகூர் அவர்களை ஆகஸ்ட் 11 ஆம் தேதி பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு வரச்சொல்லியுள்ளார். தாகூர் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து நோயாளிகளை சோதனை செய்யும் கூடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் வந்த அட்டண்டர்களை வெளியில் இருக்க சொல்லிவிட்டு, தாகூர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில் ஒருவருக்கு வயது 51, மற்றொருவருக்கு வயது 44. இதுகுறித்து கட்டாக் காவல்துறை துணை ஆணையர் பிரகாஷ் கூறுகையில், 51 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மகனும், 44 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உறவினரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இருவருக்கும் எக்கோ பரிசோதனை முடிந்தவுடன், அந்தரங்க உறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. டாக்டர் தாகூர்தான் எதையோ புகுத்தியதாக புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகிறோம். என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து விசாரிக்க அந்த மாநில சுகாதாரத்துறை மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சந்தோஷ்குமார் மிஷ்ரா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. இதனிடையே தாகூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகிவிட்டார். உடனடியாக அவரை காவல்துறை கைது செய்து கஸ்டடியில் எடுத்து விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கட்டாக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் தாகூர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அதேநேரத்தில், அவரை தாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது காவல்துறை மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு சென்ற நோயாளிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications