பெண்ணின் பித்தப் பையில் எடுக்க எடுக்க கற்கள்.. தும்கூரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபரேஷன்!
Recommended Video
தும்கூர்: கர்நாடக மாநிலம் தும்கூரில் ஒரு பெண்ணின் பித்தப் பையிலிருந்து 99 கற்களை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். கடும் வயிற்று வலியால் துடித்த அவர் தற்போது நிம்மதி அடைந்துள்ளார்.
ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டது) கடும் வயிற்று வலியால் துடித்து வந்தார். அவரது கணவர் ஒரு கூலித் தொழிலாளி. மனைவியை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டினார். டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது ராஜேஸ்வரியின் பித்தைப் பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று ராஜேஸ்வரிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சையின்போது மொத்தம் 99 கற்களை டாக்டர்கள் எடுத்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் வாசிம் இம்ரான் கூறுகையில், இது சவால்கள் நிறைந்த அறுவைச் சிகிச்சையாக மாறி விட்டது. அவருக்கு ஹெர்னியா பிரச்சினை இருந்தது. பித்தப் பை கல் ஒருபக்கம். சர்க்கரை வியாதியும் உள்ளது. பிபி உள்ளது. உடல் பருமனாலும் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதயப் பிரச்சினையும் இருக்கிறது.
பல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்பட்டாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்யக் கூடிய அளவுக்கு வசதி இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இது பல சிக்கல்களுக்கு வித்திட்டு விட்டது.
இருப்பினும் எங்களது டாக்டர்கள் குழுவின் திறமையாலும், சாதுரியத்தாலும் பித்தப் பை கற்கள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. குடல் வாலும் நீக்கப்பட்டு விட்டது. அவரது பித்தைப் பையில் இருந்த கற்களில் 3 கற்கள் சுமார் 12 மில்லிமீட்டர் அளவுக்குப் பெரிதாக இருந்தது. மற்றவை 4 முதல் 5 மில்லிமீட்டர் அளவிலானவை என்றார்.