என் பேரை தவறாக பயன்படுத்தக் கூடாது: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எதிர்ப்பு
டெல்லி: தமது பெயரை அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியினர் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டசபைக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அன்னா ஹசாரே குழுவில் இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் தனிக் கட்சி தொடங்கி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, ஜன் லோக்பால் இயக்கத்துக்கான நிதி திரட்டும்போது என் பெயரில் சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. தற்போது என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த சிம்கார்டுகளை ஒருபோதும் நான் பயன்படுத்தியதே இல்லை. அதனால்தான் எனது பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அர்விந்த் கெஜ்ரிவாலும் நானும் எதிரிகள் அல்ல. அவர் விரும்பினால் நான் பேச தயராக இருக்கிறேன். அத்துடன் எந்த தொகுதியிலும் யாருக்காகவும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்றார்.