யார் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது? காங்கிரஸில் வெட்டு குத்து 'கன ஜோர்'!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளர் அல்லாதவர்கள் யாரும் கட்சியின் சார்பில் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்று அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் அஜய் மாக்கன் தனது ட்விட்டர் இணையதளப் பக்கத்தில் திடீரென ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.
20 பேர்தான் பேட்டி கொடுக்கனும்
அதில், காங்கிரஸ் கட்சியில் 5 மூத்த செய்தித்தொடர்பாளர்கள், 15 செய்தித்தொடர்பாளர்கள் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் ஊடகங்களுக்கு இவர்கள் மட்டுமே பேட்டியளிக்கலாம் என்று தெரிவித்தார்.
ஷகீல் அகமது விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது, எந்தவொரு தனி நபரையும் மனதில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்கிறார். அத்துடன், கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருப்பவர்கள், தங்கள் மாநில பிரச்னைகள் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கலாம். அன்றாட பிரச்னைகளுக்கு கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் மட்டுமே பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மணீஷ் திவாரி, ரஷீத் ஆல்விக்கு ஆப்பு
இருப்பினும் முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, முன்னாள் செய்தித்தொடர்பாளர் ரஷீத் ஆல்வி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடையாகவே இது கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் கட்சியின் நிலைப்பாட்டை மீறி கருத்து தெரிவித்து வந்தததாக கட்சி மேலிடம் கருதுகிறதாம். இதனால் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டதாம்
மணீஷ் பிடிவாதம்
இந்த நிலையில் மணீஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், நான் 34 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சிக்கு உழைத்த சாதாரண தொண்டன். நான் பேசத்தான் செய்வேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.
மோதல் அதிகரிப்பு
இதனால் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதில் காங்கிரஸ் மூத்த மற்றும் இளம் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.