மைக் 'ஆன்'ல இருக்கு, பணத்தைப் பத்திப் பேசாத.. பாஜக வேட்பாளரை எச்சரித்த ராம்தேவ்!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மஹந்த் சந்த் நாத்துடன், செய்தியாளர்களைச் சந்தித்த யோகா குரு ராம்தேவ், அவரிடம் கிசுகிசுத்த குரலில், மைக்ரோபோன் ஆனில் உள்ளது. இப்போது நமக்கு வரும் பணம் பற்றிப் பேச வேண்டாம் என்று கூறியது மைக் மூலமாக எல்லோருக்கும் கேட்டு ராம்தேவை நெளிய வைத்து விட்டது.
ஆல்வாரில் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பின்போது தனக்கு அருகே அமர்ந்திருந்த ராம்தேவிடம், மஹந்த் சந்த் நாத் கிசுகிசுத்த குரலில், பணத்தைப் பெறுவதில் நாம் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொகுதிக்குப் பணத்தைக் கொண்டு வர முடியவில்லை என்று கூறினார்.
அதைக் கேட்ட ராம்தேவ், முட்டாள் மாதிரி பேசாதே. இங்கு மைக்ரோபான்கள் ஆனில் உள்ளன. இப்போது பணத்தைப் பற்றிப் பேசாதே என்று வேக வேகமாக கூறுகிறார்.
ஆனால் இவர்கள் இருவரும் ரகசியமாக பேசிக் கொண்டது அங்கிருந்த அத்தனை பேருக்கும் தெள்ளத் தெளிவாக கேட்டதால் இருவருமே நெளிய நேரிட்டது. இவர்கள் என்ன பணத்தைப் பற்றிப் பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் ரகசியமாக பேசிக் கொண்டதைப் பார்த்தால் முறைகேடான பணம் பற்றித்தான் பேசியிருப்பார்கள் என்று புரிகிறது.
வெளிநாடுகளில் குவிந்திருக்கும் கருப்புப் பணத்தை கொண்டு வர வேண்டும் என்று ராம்தேவ் உரத்துக் குரல் கொடுத்து வருபவர். இந்த நிலையில் உள்நாட்டுக் கருப்புப் பணத்தைப் பற்றி இருவரும் ரகசியமாக பேசிக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த கிசுகிசுப்புக்குப் பின்னர் ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்.. ஆகவே, மோடிக்கு நல்ல இமேஜ் உள்ளது. அவரது தேசியவாதத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் காங்கிரஸில் அப்படி இல்லை என்று பேச ஆரம்பித்தார்.
அப்போது சில நிருபர்கள், இப்ப ரெண்டு பேரும் ஏதோ பணத்தைப் பத்தி பேசிட்டிருந்தீங்களே.. அது என்னாது என்று கேட்க, அந்தக் கேள்வியை கோபத்துடன் தவிர்க்கப் பார்த்தார் ராம்தேவ். மேலும் அத்தோடு பேட்டியை முடித்துக் கொண்டு நாத்தையும் கூட்டிக் கொண்டு காரில் ஏறி ஓடி விட்டார் ராம்தேவ்.
பின்னர் நாத் கூறுகையில், அதெல்லாம் ஒன்றும் பேசவில்லை. அது உங்களது கற்பனை. நாங்கள் எந்தப் பணத்தைப் பற்றியும் பேசவில்லை என்றார்.
ஒருவேளை மைக்குகளே பேசியிருக்குமோ!...