அரசியல் அழுக்கில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்: கிரண் பேடி புகாருக்கு அன்னா ஹசாரே பதில்
மும்பை: கிரண்பேடி பாஜகவில் இணைந்தது தொடர்பாக கருத்துக் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார் காந்தியவாதி அன்னா ஹசாரே.
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார் காந்தியவாதி அன்னா ஹசாரே. இவரது இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2012ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி அரசியலில் பிரவேசித்தார்.
கெஜ்ரிவாலைப் போலவே, அன்னா ஹசாரேவுடன் இணைந்து பணியாற்றிய மற்றொருவரான கிரண்பேடி ஐ.பி.எஸ். தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். கிரண்பேடி இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்பது நினைவுக் கூரத்தக்கது.
கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி இருவரும் தங்களது கட்சி சார்பில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து சமீபத்தில் அன்னா ஹசாரேயை நேரில் சந்தித்து பேசியதாவும், பா.ஜனதாவில் இணைவதற்கு முன்பு அவரை போனில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை என்றும் கிரண் பேடி கூறியிருந்தார்.
இது தொடர்பாக மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரேயை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
கிரண் பேடியின் போன் அழைப்பை ஏற்று நான் பேசவில்லை என்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டு உள்ளது. நான் அரசியல் அழுக்கில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். இந்த அரசியல் அழுக்கில் நடைபோட விரும்பவில்லை. கிரண் பேடி பா.ஜனதாவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை. ஜனலோக்பால் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பிறகு தெரிவிப்பேன்.
இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.