இலங்கைக்கு வரஹா கப்பல் வழங்கியதை யாருமே எதிர்க்கலையே- லோக்சபாவில் மத்திய அமைச்சர் இந்தர்ஜித்சிங்
டெல்லி: இலங்கைக்கு வரஹா போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியதை யாரும் எதிர்க்கவில்லை என்று லோக்சபாவில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் வரஹா போர்க்கப்பலை இந்தியா அன்பளிப்பாக வழங்கியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் ஏற்கனவே இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கக் கூடாது; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்கு வரஹா போர்க்கப்பலை அன்பளிப்பாக இந்தியா வழங்கியது.
இந்நிலையில் லோக்சபாவில் அ.தி.மு.க. எம்.பிக்கள் சிவகங்கை செந்தில்நாதன் மற்றும் கோவை நாகராஜன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளித்த பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் கூறியதாவது:
இந்தியக் கடலோரக் காவல்படையின் வரஹா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பின் இந்த குத்தகை காலம் நீடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் வரஹா கப்பலை அந்நாட்டுக்கு அன்பளிப்பாக இந்தியா வழங்கியது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இருநாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் இக்கப்பல் வழங்கப்பட்டது.
இவ்வாறு ராவ் இந்தர்ஜித் சிங் கூறினார்.
விக்ரம் வகையைச் சேர்ந்த இந்த போர்க் கப்பலுக்கு இலங்கை கடற்படை, எஸ்எல்என்எஸ் சாகர என தற்போது பெயரிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இந்தியாவின் இந்த வரஹா கப்பல்தான் புலிகளுக்கு கொண்டுவரப்பட்ட பல ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் ஆழ்கடல் ரோந்துப் படகு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, அவர்களின் கடல்வழி விநியோகங்களை தடை செய்வதில் முக்கிய பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications