கனத்த மனதுக்காரர்கள் இந்த நாட்டுக்குத் தேவையில்லை.. மோடிக்கு ப.சிதம்பரம் கொட்டு
டெல்லி: இந்த நாட்டுக்கு கனத்த மனதுக்காரர்கள் தேவையில்லை என்று நரேந்திர மோடிக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொட்டு வைத்துள்ளார்.
நேற்று சென்னை வண்டலூரில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகையில், ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். ப.சிதம்பரத்தால் நாடு மிகவும் கீழே போய் விட்டதாகவும், வளர்ச்சி முற்றிலும் நின்று போய் விட்டதாகவும் சாடியிருந்தார் மோடி.
மேலும், கடந்த தேர்தலில் முதலில் தோற்று, பின்னர் மறு எண்ணிக்கை மூலம் வெற்றி பெற்றவர் ப.சிதம்பரம் என்றும் கூறியிருந்தார் மோடி. இதற்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், நாட்டுக்கு கடுமையாக உழைக்கும், நன்கு படித்த தலைவர்கள்தான் தேவை. ஆனால் கனத்த மனதுக்காரர்கள் தேவையில்லை என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.
சமீப காலமாக ப.சிதம்பரத்துடன் மோதி வருகிறார் மோடி. சமீபத்தில் ஏதோ கடவுள் அறிவை அள்ளிக் கொடுத்தபோது வரிசையில் போய் நின்று வாங்கியவர் போல பேசுகிறார் ப.சிதம்பரம் என்று சாடியிருந்தார். இந்த நிலையில் தற்போது மறு வாக்கு எண்ணிக்கையில் ஜெயித்தவர், மெத்தப் படித்ததாக நினைத்துக் கொண்டிருப்பவர் என்று சாடியுள்ளார்.