100கிமீ வேகத்தில் போகும்போது குட்காவை துப்ப கதவை திறந்த டிரைவர்.. 4 முறை சுழன்று கார் மோசமான விபத்து
ராய்ப்பூர்: சுமார் 100 கிமீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது குட்காவை துப்ப கார் கதவை டிரைவர் திறந்ததால் அது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக இருந்தே வருகிறது. பல ஊர்களில் இதுபோல பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் என விதி இருந்தாலும் கூட யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், இதுபோல எச்சில் துப்பும்போது அது சில மோசமான விபத்துகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

கார் விபத்து
அப்படியொரு சம்பவம் தான் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. அங்கு கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது குட்காவை துப்ப டிரைவர் கதவைத் திறந்துள்ளார். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.
குட்கா துப்பும்போது
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு கார் அதிவேகமாகச் சென்று கொண்டு இருந்த போது குட்காவை துப்ப டிரைவர் கதவைத் திறந்துள்ளார். அதுவும் சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்த போது குட்காவை துப்ப கதவைத் திறந்திருக்கிறார். இதனால் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியது.
பல முறை அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்த கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் கார் சாலையில் பலமுறை உருண்டு, பிற வாகனங்கள் மீதும் மோதியது. இதனால் அந்த கார்களின் டிரைவர்களும் காயமடைந்தனர்.
என்ன நடந்தது?
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "உயிரிழந்தவர் ஜாக்கி கெஹி (வயது 31) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சக்கர்பட்டா பகுதியைச் சேர்ந்த துணிக்கடை வியாபாரி. அவர் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட பிறகு தனது நண்பர் ஆகாஷ் சந்தானியை அதிகாலை 1.30 மணிக்குக் கால் செய்து தன்னை கூட்டிச் செல்லச் சொல்லியுள்ளார். ஆகாஷும் தனது நண்பர் பங்கஜ் சப்ராவுடன் ஜாக்கியை அழைத்து வரச் சென்றார்.
ஆகாஷ் காரை ஓட்டிய நிலையில், பங்கஜ் முன் இருக்கையிலும், ஜாக்கி பின் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். பிலாஸ்பூர்-ராய்ப்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆகாஷ் திடீரென குட்கா துப்ப கதவைத் திறந்தார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதியது. மேலும், அது பல முறை அப்படியே அந்தரத்திலும் சுழன்றது" என்றார்.
ஒருவர் பலி
பயணிகள் அனைவரும் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அந்தளவுக்கு கார் விபத்து வலிமையானதாக இருந்தது. இதில் ஜாக்கிக்கு மார்பு, தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஜாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆகாஷ் மற்றும் பங்கஜ் ஆகியோரும் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறு சில கார்களில் மோதியது. இதில் வேறு சிலரும் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அது மிக மோசமான விபத்தாக இருக்கிறது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications