திருமணத்தை மீறிய உறவு.. துரத்திய சந்தேகம்.. மனைவியின் கால், கையை துண்டாக்கிய கொடூரம்!
மத்திய பிரதேசம்: திருமணத்தை மீறிய உறவு தொடர்பான சந்தேகத்தால் அரங்கேறிய சம்பவம் கேட்போரை அதிர வைக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் நகரைச் சேர்ந்தவர் 32 வயதே ஆன ப்ரீத்தம் சிங் சிசோடியா. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்தூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராக சங்கீதா பணிபுரிந்து வருகிறார். வேலை நாட்களில் இந்தூரிலேயே தங்கியிருக்கும் சங்கீதா, விடுமுறை தினங்களில் போபால் வந்து குடும்பத்தினருடன் இருப்பது வழக்கம்.
குடிப்பழக்கம் உள்ள சிசோடியா, மனைவி வெளியூரில் வேலை பார்ப்பதால், அவர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறாரா என்பது குறித்து எப்போதும் சந்தேகத்துடன் இருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில், விடுமுறையை முன்னிட்டு, கடந்த செவ்வாய் அன்று, போபாலில் உள்ள கணவர் வீட்டுக்கு சங்கீதா வந்திருந்தார். அப்போது இரவு 11:30 மணியளவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிசோடியா, கள்ள உறவு வைத்திருக்கிறாயா என்று கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
போதை தலைக்கு ஏற, கோடாரியை எடுத்து மனைவி சங்கீதாவின் வலது கால் மற்றும் கை ஆகியவற்றை துண்டித்து இருக்கிறார். ரத்தம் கொப்பளிக்க வலியால் சங்கீதா அலறிய சப்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் விரைந்து வர, அவர்கள் முன்னிலையிலேயே மனைவியின் தலையை துண்டித்து எடுக்க சிசோடியா முயன்ற போது மடக்கிப் பிடித்தனர். சுயநினைவு இழந்த சங்கீதா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டும், 'இப்போது உள்ள நிலையில் மீண்டும் அவரது கை, கால் அறுவை சிகிச்சை மூலம் சேர்க்கப்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தாய் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, தந்தை போலீஸ் கஸ்டடியில் இருக்க, தவிப்பது என்னவோ ஒன்றும் அறியாத அந்த பிள்ளை தான்.