மைக்டைசனாக மாறி நண்பனின் காதை கடித்துத் துப்பிய மும்பை ‘குடி’ மகன்
மும்பை: காமெடிப் படங்களில் வருவது போல் சண்டையை விலக்கி விடச் சென்ற நண்பரின் காதை குடிபோதையில் இருந்த மற்றொரு நண்பர் கடித்துத் துப்பிய சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
மும்பை, கல்யான் பகுதியை சேர்ந்தவர் சுஷில் ஜாதவ். இவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி ஞாயிற்றுக்கிழமையை செலவிட திட்டமிட்டுள்ளார். அதன்படி, சுஷிலின் நண்பர்களான கேத்தான் மற்றும் ராகேஷ் ஆகியோரோடு மது அருந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஏற்கனவே, அவர்கள் இருவரும் மது அருந்தி போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அது சண்டையாக மாறியுள்ளது. சரியாக சுஷில் அவர்களது வீட்டிற்குள் நுழையும் போது கேத்தானும், ராகேஷும் அடிதடியில் இறங்கியுள்ளனர்.
அதனைக் கண்டு பதறிப்போன சுஷில், இருவரையும் சமாதானப் படுத்த முயற்சித்துள்ளார். அதற்காக, ராகேஷைப் பிடித்துள்ளார் சுஷில், ஆனால் அதுவரை கேத்தானை தாக்கிக்கொண்டிருந்த ராகேஷ், ஆத்திரத்தில் சுஷிலை கடுமையாக தாக்க துவங்கியுள்ளார்.
வெறித்தனமாக சுஷிலை அடித்த ராகேஷ், 25 முறை அவரை உடல் முழுவதும் கடித்து, காதையும் கடித்து துப்பியுள்ளார். ஏற்கனவே, ராகேஷிடம் அடிவாங்கி களைத்துப் போயிருந்த கேத்தானால் சுஷிலை ராகேஷிடமிருந்து காப்பாற்ற இயலவில்லையாம்.
உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சத்குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷில், தன்னை அடித்ததாக ராகேஷ் புகார் அளித்துள்ளார். ராகேஷும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதால், வழக்கு பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் ராகேஷ் கைது செய்யப்படுவாரென தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications