முட்டையில் இருந்து கோழி வந்துச்சா, கோழியில் இருந்து முட்டை வந்துச்சா.. கொலையில் முடிந்த வாக்குவாதம்
ஜகர்தா: இந்தோனேஷியாவில் நண்பர்கள் இருவர் மது அருந்தியபோது, கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் வழங்காததால் நண்பரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைக் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக மதுபோதையில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறிய, சிறிய பிரச்னைகளுக்கு கூட கொலைச் சம்பவங்கள் நடப்பது பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவில் முட்டையில் இருந்து கோழி வந்துச்சா, கோழியில் இருந்து முட்டை வந்துச்சா என்ற வாக்குவாதம் முற்றி நண்பரைக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் கதிர் மார்க்கஸ் (47) மற்றும் டிஆர். இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கதிர் மார்க்கஸை மது அருந்துவதற்காக டிஆர் கடந்த 24 ம் தேதி அழைத்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில், கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்துள்ளதாக என்று டிஆர் கேள்வி எழுப்பியுள்ளார். இது இருவருக்குமிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கதிர் மார்கஸ் இதுகுறித்து விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த டிஆர், கதிர் மார்க்கஸை பைக்கில் துரத்திச் சென்று பலமுறை தாக்கி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, மார்க்கஸ் உடல் கடந்த 26ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து டிஆர் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் குற்றம் நீரூபணமானால், கொலையாளிக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை கிடைக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல, கடந்த ஆண்டு வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிய நண்பர் ஒருவரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications