பெங்களூரில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்: காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்த காவலாளி மீது மிளகாய் பொடியை தூவி பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
பெங்களூர் பீனியா அருகே உள்ள திகளரபாளையாவில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அந்த மையத்தில் தும்கூரைச் சேர்ந்த பசவராஜ் என்பவர் காவலாளியாக உள்ளார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு முகமூடி அணிந்த 2 பேர் பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர்.
காவலாளி பசவராஜின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் தலை, கை, காலில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அந்த இருவரும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அதற்குள் மயக்கம் தெளிந்த பசவராஜ் திருடன் திருடன் என்று கூச்சலிட பக்கத்து கட்டிடத்தில் காவலாளியாக உள்ள பிரகாஷ் ஓடிவந்தார். உடனே அந்த இரண்டு பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து பசவராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
முன்னதாக பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பெண் அதிகாரியை தாக்கி பணம் பறித்த நபர் இன்னும் போலீசில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications