'புதிய இந்தியா' 2022க்குள் பிறக்கப் போகிறது.. உலக தொழில்முனைவோர் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு
ஹைதராபாத்: புதிய இந்தியா 2022க்குள் பிறக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை என்று பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார்.
ஹைதராபாத்தில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவாங்கா ட்ரம்ப் ஆகியோர் இணைந்து, உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
இதன்பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: தெற்காசியாவில் முதல் முறையாக நடைபெறும், உலக தொழில் முனைவோர் மாநாடு இந்தியாவில் நடைபெற்றுள்ளது பெருமையாகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மகளிர் மேம்பாடு அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். எங்கள் வரலாற்றில் பெண்களின் திறமைக்கு சான்று உள்ளது.

பெண்களின் பெருமை
போர் ராணிகளான ராணி அகில்யாபாய் ஹோல்கர், ராணி லட்சுமிபாய் போன்றோர் தங்கள் ராஜாங்கத்தை வீரத்தால் காத்தனர். சுதந்திர போராட்டத்திலும் அதுபோன்ற நிகழ்வுகளை காண முடியும். எங்களின் விண்வெளித்துறை ஆய்வில் அதிக பெண் விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்க விண்வெளி துறையில் பணியாற்றிய, கல்பனா சாவ்லாவும், சுனிதா வில்லியம்சும் இந்திய வம்சாவளியினர். பல பெண் விளையாட்டு வீராங்கனைகள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர். இந்த நகரம், சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் சானியா மிர்சா ஆகியோரின் தாய் வீடு.

தொழில் தொடங்கலாம்
2018க்குள் இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 800 மில்லியனாக உயரும். இதில் பல வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில் வாய்ப்புகளுக்கு இடையூறாக இருந்த 1200 தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளோம். அரசின் நடவடிக்கையால்தான், தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் 180வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 100வது இடத்திற்கு வந்துள்ளது.

100 போதாது
இந்தியா 100வது இடத்திற்கு முன்னேறியதில் கூட எனக்கு திருப்தியில்லை. 50வது இடத்திற்காவது முன்னேற வேண்டும். அதை இந்த அரசு செய்யும். முத்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். உலகின் மிகப்பெரிய டேட்டா சேமிப்பு திட்டமான ஆதார் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. இந்தியா நீண்ட காலமாகவே கண்டுபிடிப்புகளின் தாயகம். ஆயுர்வேதம், யோகா போன்றவை இந்தியாவின் கொடைகள்.

புதிய இந்தியா பிறக்கிறது
இந்திய அரசின் தொடர் பொருளாதார உந்துதல் நடவடிக்கையால், இந்திய பொருளாதாரத்தை மூடி'ஸ் அமைப்பு பாராட்டியுள்ளது. இந்தியாவிற்கு தொழில் தொடங்க வாருங்கள் என முதலீட்டாளர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 2022க்குள் புதிய இந்தியாவை கட்டமைக்க ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம். இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications