முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல்?.. முஸ்தீபுகளில் குதிக்கும் பாஜக!
டெல்லி: முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதுதொடர்பாக பாஜக முதல்வர்கள் கூடி விவாதிக்கவுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முழங்க ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாக பிப்ரவரி 28ம் தேதி நடைபெறவுள்ள பாஜக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதற்கான அழைப்பை பாஜக தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாம். குறிப்பாக முன்கூட்டியே லோக்சபாவுக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் பாஜக முதல்வர்கள், அந்தந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசி இந்தக் கருத்துக்கு ஆதரவு திரட்டுமாறும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
பிரதமர் மோடியும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார். அடிக்கடி தேர்தல் நடந்தால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும் என்பது அவரது கருத்தாகும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மிஸோரம் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி லோக்சபா தேர்தலும் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. லோக்சபா தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்குமாறு காங்கிரஸ் கட்சியும் தனது கட்சியினரை ஏற்கனவே உஷார்படுத்தியுள்ளது.
முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு தேர்தல் ஆணையமும் கூட பச்சைக் கொடி காட்டியிருப்பதாகவே தெரிகிறது கூட்டிக் கழித்துப் பார்த்தால் விரைவில் லோக்சபா தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.












Click it and Unblock the Notifications