லடாக்கில் திடீர் நிலநடுக்கம்.. துருக்கியை தொடர்ந்து குலுங்கிய பூமி.. ரிக்டரில் 4.2 என பதிவு.. ஷாக்
இந்தியாவின் எல்லை பகுதிகளில் ஒன்றாக லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லடாக்: லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் இன்று திடீரென பூமி குலுங்கியது. விசாரணையில் கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாகவும் தேசிய நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இங்கு ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பகுதி என்பதால் நிலநடுக்கத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி விபரம் சேகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா சீனா, பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதில் இந்தியாவின் லடாக் பகுதி என்பது ஒருபுறம் பாகிஸ்தானுடனும், மற்றொரு புறம் சீனாவுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
லடாக்கின் தெற்கு பகுதி இமாச்சல பிரதேசமாக இருக்கும் நிலையில் மேற்கு பகுதி பாகிஸ்தானுடனும், வடக்கு பகுதி சீனாவுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதனால் எப்போதும் ராணுவத்தினர் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் மக்கள் வசிப்பது இல்லை. இந்தியா சார்பில் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் இன்று மதியம் 3.17 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது.
கார்க்கில் பகுதியில் பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் பூமியின் மேல்புறம் நிலநடுக்கமாக உணரப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அங்கு உயிர் பலி, சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பகுதி என்பதால் நிலநடுக்கத்துக்கான காரணம் பற்றி ஆராயப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் பல ஆயிரம் பேர் சிக்கினர். இன்று 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் கூட பலபேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் இன்று லடாக்கின் கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications