குலுங்கிய பூமி.. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் நிலநடுக்கம்! மக்கள் அச்சம்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 என மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.
புவி அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை 3:27 மணிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. சம்பாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து NCS தனது எக்ஸ் தளத்தில், "ரிக்டர் அளவில் 3.3, இன்று அதிகாலை 03:27:09 IST மணிக்கு, அட்சரேகை: 32.87 N, தீர்க்கரேகை: 76.09 E, ஆழம்: 20 கி.மீ, இடம்: சம்பா, இமாச்சலப் பிரதேசம்" என்று பதிவிட்டுள்ளது.

இரண்டாவது நிலநடுக்கம் சரியாக அதிகாலை 4:39:45 இந்திய நேரப்படி ஏற்பட்டது. இது சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், குல்லுவில் உள்ள லக்காகி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இது குறித்து துணை ஆணையர் தோருல் எஸ். ரவிஷ் கூறுகையில், பூத்நாத் பாலத்திற்கு அருகிலுள்ள சாலை சேதமடைந்துள்ளதாகவும், ஹனுமானி பாக் பாலம் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஒரு தகன மையமும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
"இரண்டு கடைகள் மற்றும் இரண்டு காய்கறிக் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வீடும் சேதமடைந்துள்ளது. ரோப்டி பூதி பாலமும் சேதமடைந்துள்ளது. அனைத்து துறைகளும் சேத மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றன" என்று கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழை பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்புகள் தவிர, ஏராளமான வீடுகள், கால்நடை கொட்டகைகள், விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம் 1,104 வீடுகள் முழுமையாகவும், 37 கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் முற்றிலுமாகவும் சேதமடைந்துள்ளன.
மேலும், 2,416 மாட்டுத் தொழுவங்கள் மற்றும் பிற கிராமப்புற கட்டுமானங்கள் இடிந்துள்ளன. இந்த கனமழையில் 27,552 க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளன. இது மாநிலத்திற்கு பெரிய பொருளாதார மற்றும் சமூக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications