இரட்டை இலை சின்னம் வழக்கு: சசிகலா உட்பட 4 பேருக்கு நோட்டீஸ்- அக். 5ல் இறுதி விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அக்டோபர் 5-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா, ஓபிஎஸ், மதுசூதனன், தினகரன் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 5-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஓபிஎஸ், சசிகலா அணிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர், கட்சி கொடி ஆகியவை முடக்கப்பட்டன.

பொதுக்குழு
பின்னர் இரு அணிகளும் இரட்டை இலை சின்னமும் கட்சியும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோரி பல்லாயிரக்கணக்கான மனுக்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தன. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டின.

தினகரன் தரப்பு மனு
சசிகலாவை அதிமுக நியமனப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் தரப்பு தங்களை கேட்காமல் இரட்டை இலை சின்ன வழக்கில் முடிவெடுக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தது.

வழக்குகள்
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ்
இந்நிலையில் மதுசூதனன், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-5ல் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 29-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்.5ல் இறுதி விசாரணை
மேலும் அனைவரும் அக்டோபர் 4-ந் தேதி தேர்தல் ஆணையத்திடம் நேரில் ஆஜராக வேண்டும். அக்டோபர் 5-ந் தேதியன்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications