இன்று மாலை முதல் எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளுக்கு அனுமதி
டெல்லி: இன்று மாலை 6.30 மணிக்கு பிறகு எக்சிட் போல்களை(தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகளை) வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி 9 கட்டமாக நடந்து வருகிறது. இன்று இறுதி கட்டம் மற்றும் 9வது கட்ட தேர்தல் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் நடந்து வருகிறது.
தேர்தலையொட்டி ஏப்ரல் 7ம் தேதி காலை 7 மணி முதல் மே 12ம் தேதி மாலை 6.30 மணி வரை எக்சிட் போல்களை(தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகளை) வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேர்தல் ஆணையரான ஹெச்.எஸ். பிரம்மா கூறுகையில்,
இறுதி கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் சிலவற்றில் மறுவாக்குப்பதிவு நடைபெறலாம். அதனால் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான மே 16ம் தேதிக்கு முன்பாக எக்சிட் போல்களை வெளியிடக் கூடாது. 16ம் தேதி மாலை வரை யாரும் எக்சிட் போல் பற்றி வாய் திறக்கக் கூடாது என்றார்.
இதையடுத்து அவரின் பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்ட தேர்தல் ஆணையம், மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிறகு எக்சிட் போல்களை வெளியிடலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரம்மா வாய் தவறி மே 16ம் தேதி என்று கூறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.