ஐஎன்எக்ஸ் வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் சுமார் ரூ.54 கோடி மதிப்புள்ள, சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மோசடியை மறைக்க கார்த்தி சிதம்பரம் தனது நிறுவனங்கள் மூலம் உதவியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் 24 நாள்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் சில முடக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் அடுத்தகட்டமாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சுமார் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி வீடும் ஒன்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்திராணி முகர்ஜி சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
[வரலாறு காணாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் சரிவு.. என்ன நடக்கிறது?]
ஊட்டி உள்ளிட்ட உள்நாட்டிலுள்ள சொத்துக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டிலுள்ள சொத்துக்களும் இதில் அடக்கம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்துமே அசையா சொத்துக்கள் என கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சிதம்பரம் மீதான விசாரணை வளையம் நெருக்கப்படுவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications