எங்க அதிகாரிகளையே கைது செய்வீங்களா? ராஜஸ்தானில் இன்று 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு நடுவே அமலாக்கத்துறை இன்று 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல அமைச்சர்களை இலக்கு வைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் மகனுக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் ஏலச் சீட்டு மோசடி வழக்கில் குற்றவாளிகளை தப்பி வைக்க லஞ்சம் பெற்றதாக 2 அமலாக்கத்துறை அதிகாரிகளை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி கைது செய்தனர். ரூ15 லட்சம் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பிடிபட்டதாக படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்.
இதனைத் தொடர்ந்து இன்று ராஜஸ்தானில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், பொது சுகாதார பொறியியல் துறை ஆகியவற்றில் நடந்த ஊழலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறி இந்த சோதனையை அமலாக்கத்துறை நடத்தியது. ராஜஸ்தான் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுபோத் அகர்வாலுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதே வழக்கில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ஜெய்ப்பூர், ஆல்வார், நீம்ரானா, பெஹ்ரார் ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. அப்போது 12 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தீஸ்கரிலும் ரெய்டு: ஜல் ஜீவன் குடிநீர் திட்ட ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17-ந் தேதி இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மிரட்டலால் அங்கு பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், பிலாய் பகுதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இச்சோதனைகளின் போது கணக்கில் வராத ரூ4.92 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications