அன்னிய செலாவணி மோசடி: லலித் 'கூட்டாளி' வசுந்தர ராஜே மகனிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை?!
டெல்லி: அன்னிய பணப்பரிவர்த்தனை சட்ட விதி (ஃபெமா) மீறல் தொடர்பாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சொந்தமான ஆனந்த் ஹெரிட்டேஜ் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சஜ்ஜன் மோடியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங்கையும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சொந்தமானது ஆனந்த் ஹெரிட்டேஜ் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தின் இணை இயக்குநர்களாக 2007ஆம் ஆண்டு வரை இருந்தவர்கள் சஜ்ஜன் மோடி, சத்ய நாராயணன் ஆகியோர்..

இதன் பின்னர் மொரீஷியஸைச் சேர்ந்த லா மோ என்பவருக்கு சொந்தமான வில்டன் இன்ஸ்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ரூ21 கோடியை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து கையகப்படுத்திக் கொள்கிறது.
அதே நேரத்தில் வசுந்தரராஜே மகன் துஷ்யந்த் சிங்குக்கு சொந்தமான நியாந்த் ஹெரிட்டேஜ் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2007ஆம் ஆண்டு லலித் மோடியின் ஆனந்த் நிறுவனத்துக்கு ரூ11 கோடி கடன் கொடுத்ததாகவும் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனந்த் ஹோட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மொரீஷியஸ் நிறுவனம் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி பெறவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த மொரீஷியஸ் நிறுவனம் மூலமான முதலீடு மற்றும் துஷ்யந்த் சிங் நிறுவனம் கடனாக கொடுத்ததாக காட்டப்படும் கணக்கு ஆகியவை குறித்து அமலாக்கப் பிரிவு சந்தேகம் தெரிவிக்கிறது.
இதில் அன்னியப் பணபரிவர்த்தனை சட்டமான ஃபெமாவின் விதிமீறல்கள் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே ஆனந்த் ஹோட்டலின் இயக்குநராக இருந்த சஜ்ஜன் மோடியிடம் நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்தே வசுந்தரராஜே மகன் துஷ்யந்த் சிங்கையும் விரைவில் விசாரிக்க இருக்கிறது அமலாக்கப் பிரிவு என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
அலைகள் ஓய்வதில்லை!












Click it and Unblock the Notifications