சத்தீஷ்கரில் பூபேஸ் பாகல் வீடு உள்பட 14 இடங்களில் ரெய்டு.. ED அதிகாரிகள் மீது தாக்குதலால் பரபரப்பு
ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை முடிந்து சென்ற போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுக்க பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இவ்வாறு கூறப்படும் நிலையில், இன்று சத்தீஷ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

14 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக 14 இடங்களில் இன்று அமலக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பூபேஷ் பாகேலுக்கு சொந்தமான இடங்கள், அவரது மகன் வீடு என மொத்தம் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மதுபான கொள்கை விவகாரத்தில் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.
துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பாகல் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பூபேஷ் பாகேல் வீட்டிற்கு அமலாக்கத்துறை சோதனை நடத்திவிட்டு சென்ற போது, சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகளை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்
அதாவது, ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் சில அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனவே இது தொடர்பாக போராட்டக்கார்ர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை புகாரளிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாக பூபேஷ் பாகல் அலுவலக எக்ஸ் தளத்தில் கூறியதாவது:- "கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து வரும் பொய் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். இந்த சதித்திட்டம் வாயிலாக பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தடுக்க முடியும் என்று நினைத்தால் அது தவறானது" எனக்கூறப்பட்டு இருந்தது.
வழக்கு என்ன?
சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்வராக பூபேஷ் பாகல் இருந்த போது கடந்த 2019 - 2022 ஆம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாத குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதில் சட்ட விரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே இன்று 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications