பாஜக- அதிமுக கூட்டணி முறிவு: வாயை திறக்கவே மாட்டேனே... ஆந்திரா பிரஸ்மீட்டில் அடம்பிடித்த எடப்பாடி!
விஜயவாடா: பாஜகவுடனான கூட்டணியை முறித்தது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியிருப்பது கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சித்து வந்தார். இது தொடர்பாக டெல்லியிலும் அதிமுக தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.

உக்கிரம் காட்டிய அண்ணாமலை: டெல்லியில் புகார் தெரிவித்த பின்னர்தான் அதிமுக தலைவர்களை படு உக்கிரமாக அண்ணாமலை விமர்சித்தார். ஒரு கட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஆதரவு தர முடியாது என தடாலடியாக அறிவித்தார் அண்ணாமலை.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: இன்னொரு பக்கம் , எடப்பாடி பழனிசாமிக்கு பக்கத்திலேயே இருக்கும் சிலரை வைத்து அதிமுகவை உடைக்கும் சதிகளை டெல்லி தொடங்கிவிட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதனால் வேறுவழியே இல்லாமல் அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, பாஜகவுடனான கூட்டணி முறிந்தது; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது என தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தனர்.
மீண்டும் கூட்டணியோ?: ஆனாலும் அதிமுக எந்த நேரத்திலும் பாஜகவுடன் சமாதானமாகிவிடும் என்கிற சந்தேகம் எதிர்க்கட்சிகளால் மட்டுமல்ல... அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களாலுமே எழுப்பப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் பெரும் மவுனமாக இருக்கின்றனர். பாஜக தரப்பிலும் அதிமுகவை காட்டமாக விமர்சிக்கும் கருத்துகள் வரவில்லை. இந்த சந்தேகங்களுக்கு எப்போது விடை கிடைக்கும் என்பதும் தெரியாத நிலைமைதான் தற்போது வரை உள்ளது. டெல்லி பாஜக தலைமையும் அதிமுகவின் தீர்மானத்தை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யாமல் இருந்து வருகிறது.
ஆந்திராவில் எடப்பாடி பழனிசாமி: இந்நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சென்றார். அங்கு கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சாமி தரிசனம் மட்டுமே செய்ய வந்திருக்கிறேன் என்றார். ஆனாலும் விடாத செய்தியாளர்கள், பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கையை எடுத்து கும்பிட்டு Please... Please.. என வாயையே திறக்க மாட்டேனே என்ற ரேஞ்சில் அடம்பிடித்தபடியே நகர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. விஜயவாடாவை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications