வாரணாசி: பல்லாயிரக்கணக்கானோருடன் கேஜ்ரிவால் பேரணி- முட்டை,கருப்பு மை வீச்சு-கருப்புக் கொடி போராட்டம்
வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசியில் போட்டியிடுவது குறித்து மக்களிடம் கருத்து கேட்க வந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது பாரதிய ஜனதா கட்சியினர் முட்டைகள் மற்றும் கருப்பு மை வீசியதால் பதற்றம் நிலவியது.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியிலும் குஜராத்தின் வதோரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொதுவேட்பாளரை களம் இறக்குவது குறித்து சமாஜ்வாடி- காங்கிரஸ் ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில் அத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து மக்களிடம் கருத்து கேட்க ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் இன்று வாரணாசி வந்தார். பின்னர் காலை 10.30 மணியளவில் கங்கை நதியில் நீராடிய கையோடு கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது பாஜகவினர் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், மோடியை எதிர்ப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை.. நாட்டைக் காப்பதுதான் முதன்மையான விஷயம் என்றார். பகல் 12 மணியளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கேஜ்ரிவால் சென்றார்.
சராமரி முட்டைகள் வீச்சு
காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் வெளியே வந்த போது அவரது வாகனம் மீது முட்டைகள் சராமரியாக வீசப்பட்டன. இந்த முட்டைகள் கேஜ்ரிவாலின் வாகனம் மீதும் அவரது ஆதரவாளர்களும் மீது விழுந்து தெறித்தது.
கருப்பு மை வீச்சு
பின்னர் தமது ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ திறந்து வாகனத்தில் ஊர்வலமாக கேஜ்ரிவால் சென்றார். அப்போது கேஜ்ரிவால் மீது கருப்பு மையை பாஜகவினர் வீசினர். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது கருப்பு மை வீசியவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
கருப்புக் கொடி
அதன் பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு கேஜ்ரிவால் சென்ற போது வழியில் பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நீடித்தது.
சாமியார்களுடன் சந்திப்பு
மேலும் காசியில் பல்வேறு ஹிந்து மத சாமியார்களையும் கேஜ்ரிவால் சந்தித்து ஆலோசித்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications