ஊழல் ரேட் கார்டு.. விளம்பரம் வெளியிட்ட காங்கிரஸுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்!
பெங்களூர் : கர்நாடகா தேர்தலையொட்டி, ஆளும் பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஊழல் விகிதங்களை விளம்பரமாக வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து போயுள்ளதாக காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் விகிதங்கள் என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பாஜக டபுள் என்ஜின் அரசு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதற்கு பதிலடியாக 'டிரபிள் என்ஜின்' எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகாவில் ஆளும் அரசு ரூ.1,50,000 கோடியை கொள்ளையடித்துள்ளதாக காங்கிரஸ் வெளியிட்ட கரெப்ஷன் ரேட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. "கடந்த 4 ஆண்டுகளில் 40 சதவீத கமிஷன் பெற்று கர்நாடக மக்களின் பணம் 1,50,000 கோடிக்கு மேல் கொள்ளையடித்துள்ளது பாஜக அரசு. கொள்ளையை நிறுத்துங்கள்" என்று அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நீங்கள் வழங்கிய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகியவற்றின் விகிதங்களுக்கான சான்றுகள் மற்றும் ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை மே 7ஆம் தேதி மாலை 7 மணிக்குள் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications